தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் வாக்கு சேகரிப்பு


தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 10:30 PM GMT (Updated: 16 April 2019 11:02 PM GMT)

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் டாக்டர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார். பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், நல்லம்பள்ளி, ஏரியூர், தர்மபுரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வன்னியர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 20 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றி, வன்னியர்களுக்கு மட்டுமின்றி 108 சாதிகளுக்கு மிகவும் பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீட்டை வழங்கியவர் கருணாநிதி. அதன் மூலம் இந்த சமுதாய மக்கள் நல்ல கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற்று வாழ்க்கையில் உயர்வு பெற வழிவகுத்தார். அந்த நன்றி கடனை நினைத்து பார்த்து கருணாநிதியின் வழியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தி.மு.க.விற்கு வன்னியர் சமுதாய மக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம். தற்போதைய சூழலில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க தகுதி படைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். வன்னியர் சமூகத்திற்கு துரோகம் விளைவித்தவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு சி.என்.ராமமூர்த்தி பேசினார்.

வாக்குசேகரிப்பின்போது அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் துணைத்தலைவர் குமரப்பா, செய்தி தொடர்பாளர் காளியப்பன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சேட்டு, கிழக்கு மாவட்ட செயலாளர் முனியப்பன், இளைஞர்அணி மாவட்ட செயலாளர் வேல் முருகன், அனைத்திந்திய சி.என்.ஆர்.பேரவை மாநில தலைவர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story