காஞ்சீபுரம் மாவட்டத்தில் 236 பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 236 பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 11:15 PM GMT (Updated: 17 April 2019 5:01 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 4,122 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் பதற்றமானவை 236. பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 1,357 வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதிரி வாக்குச்சாவடிகள் தொகுதிக்கு 4 என்ற வகையில் மொத்தம் 11 தொகுதிகளில் 44 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் 22 வாக்குச்சாவடிகள் செயல்படவுள்ளன.

உத்தரமேரூர் தொகுதியில் 289-வது வாக்குச்சாவடி மையமான எடையம்புதூரிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 271-வது வாக்குச்சாவடி மையமான குண்டுபெரும்பேட்டிலும் மாற்றுத்திறனாளி வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே பணிபுரிய உள்ளனர்.

வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் கொண்ட 239 குழுவினர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, அதன் இயக்கங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட உள்ளன.

மொத்தம் உள்ள 4,122 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 4 பேர் என வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர். இடைத் தேர்தல் நடைபெறவுள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 2 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 6 பேர் பணிபுரியவுள்ளனர். அதன்படி, அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரியவுள்ளனர். மேலும், 3,298 வாக்குச்சாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நாளன்று கிராம பகுதிகளில் மட்டும் 3,600 காவலர்கள் பணிபுரியவுள்ளனர். மதுரவாயல், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மாநகர பகுதிகளில் 4 ஆயிரம் போலீசார் என மொத்தம் 7,600 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், கிராமிய பகுதிகளில் மட்டும் 1,032 போலீசார் அல்லாதோர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் 15 முதல் 20 சதவீதம் மாற்றாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த முடியும். வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் செல்லும் விதமாக மொத்தம் 578 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், கூடுதலாக 10 சதவீத வாகனங்களும் மாற்றாக வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story