கோவை தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நர்சு சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


கோவை தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நர்சு சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 April 2019 11:15 PM GMT (Updated: 17 April 2019 5:55 PM GMT)

கோவை தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நர்சு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி நிர்மலா (வயது35). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான். இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான நிர்மலா தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர், தான் பகுதி நேரமாக பணியாற்றும் ராமநாதபுரத்தில் உள்ள என்.எம். ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ய அழைத்ததாக கூறப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணியான நிர்மலா பிரசவத்துக்காக கடந்த 15-ந் தேதி அந்த தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கருவில் இருந்த குழந்தை இறந்தது தெரியவந்தது. அந்த குழந்தை எப்படி? இறந்தது என்பது தெரியவில்லை. தொடர்ந்து அங்கு டாக்டர் இல்லாததால் நிர்மலாவுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கவில்லை என்று தெரிகிறது.

பின்னர் மறுநாள் அதாவது நேற்று முன்தினம் நிர்மலாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இறந்தநிலையில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே நிர்மலாவின் உடல்நிலை மிகவும் மோசமானது.

இதனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோவையில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குள்ள டாக்டர்கள் நிர்மலா உடல் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவரின் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி நிர்மலாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை மையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு, நிர்மலாவின் உடலை அவர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story