தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 8:12 PM GMT)

தேர்தலை நிறுத்த அ.தி.மு.க. முயற்சிக்கவில்லை என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே கோவை ரோட்டில் உள்ள அ.தி.மு.க. பணிமனை முன்பாக மாற்று கட்சியினர் சிலர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் பற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முடிவு செய்வர். பிரசார அனுமதி விவகாரத்துக்கு டெல்லியில் இருந்து வந்த தேர்தல் பார்வையாளரே முழு காரணம். எங்களுக்கு கடந்த 12-ந்தேதியே பிரசார அனுமதியை கொடுத்து விட்டனர். அதன்படி மதியம் 2 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு இறுதிக்கட்ட பிரசாரத்தை மனோகரா கார்னரில் முடிப்பதாக கூறியதற்கு, தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டு கொடுத்து விட்டனர். அதன் பிறகு எதிர்க்கட்சி (தி.மு.க.-காங்கிரஸ்) கேட்கிறார்கள் என்றால், எங்களிடையேயும் அதிகாரி கேட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இதை தான் கலெக்டரிடம் கூறி, எங்களுக்கு கொடுத்த நேரப்படி நாங்கள் வருகிறோம் என்றோம். ஆனால் அவர், ஆன்லைன் விண்ணப்பத்தில் நேரம் சரிவர குறிப்பிடவில்லை என்றார். அதற்கு சர்வர் கோளாறு காரணமாக அது போல் ஆகிவிட்டது என்றேன். அது எங்களது தவறு அல்ல. 6 தடவை அப்லோடு செய்தும் அது ஏறவில்லை. தேர்தல் பார்வையாளர் எங்களை கூப்பிட்டு நேரம் ஒதுக்கி இருந்தால் இவ்வளவு பிரச்சினை நடந்திருக்காது.

இறுதி பிரசார பயணத்தை அனைவருமே டவுனில் தான் முடிக்க எண்ணுவர். அதை தப்பு என்று சொல்லவில்லை. எனினும் இறுதி கட்ட பிரசாரத்தில் சரிவர திட்டமிடாமல் எங்களை வழிமறித்து கல்வீசி தாக்கினார்கள். யார் முதலில் எறிந்தார்கள் என்பதை பார்க்க வேண்டும். எங்களது வார்டு செயலாளர், காலில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். தி.மு.க. தான் அராஜகம் செய்தது. 10 ஆயிரம் பேர் இருக்கிற இடத்தில், எங்களது காரை அடித்தால் நாங்கள் பார்த்து கொண்டு இருப்போமா?. அ.தி.மு.க. என்றுமே அராஜகத்துக்கு துணை போகாது. ஜெயலலிதா வழியில் எங்களது முதல்-அமைச்சரும் அதை தான் சொல்லியிருக்கிறார். நாங்கள் ஜெயிக்கப்போவது உறுதி. அப்படி இருக்கையில் நாங்கள் (அ.தி.மு.க.) தேர்தலை நிறுத்த முயற்சிக்கவில்லை. தேர்தல் நின்றால் மறுபடியும் யார் ஒரு மாதத்திற்கு பிரசாரம் செய்வது. இதை பொறுத்து கொள்ள முடியாமல் தான் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story