திருச்சி அருகே 3 மாடுகள் திடீர் சாவு


திருச்சி அருகே 3 மாடுகள் திடீர் சாவு
x
தினத்தந்தி 27 April 2019 10:45 PM GMT (Updated: 27 April 2019 8:05 PM GMT)

திருச்சி அருகே 3 மாடுகள் திடீரென செத்தன.

திருச்சி,

திருச்சி பொன்மலைப்பட்டியை அடுத்து கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, முடுக்குப்பட்டி உள்பட ஏராளமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முடுக்குப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான 3 பசு மாடுகள் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது அந்த மாடுகள் அடுத்தடுத்து திடீர், திடீரென இறந்தன. இது பற்றி அறிந்த முருகேசன் அங்கு சென்று பார்த்தார். மாடுகள் திடீரென இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

வேலி அமைக்க கோரிக்கை

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்ததால் இறந்து இருக்கலாம் என்றும், கடந்த சில நாட்களில் மட்டும் 10 மாடுகள் வரை இறந்து உள்ளதாகவும் அந்த பகுதியினர் தெரிவித்தனர். மேலும், மாடுகள் இறப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் பகுதிக்கு மாடுகள் செல்லாத வகையில் வேலி அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story