வியாசர்பாடியில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை ஆட்டோ டிரைவர் கைது


வியாசர்பாடியில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 April 2019 10:30 PM GMT (Updated: 29 April 2019 6:05 PM GMT)

வியாசர்பாடியில், வாய்த்தகராறில் பக்கத்து வீட்டு வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி திடீர்நகர், காந்திபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 30). மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து தனது தாயார் ருக்மணியுடன் தனியாக வசித்து வந்தார்.

குப்புசாமிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன்(40) என்பவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி, தன்னிடம் இருந்த கத்தியால் வெங்கடேசனை குத்த முயன்றதாக கூறப்படுகிறது.

உடனே சுதாரித்துக்கொண்ட வெங்கடேசன், குப்புசாமி கையில் இருந்த கத்தியை பறித்து, அவரது மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த குப்புசாமி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வியாசர்பாடி போலீசார், கொலையான குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி குப்புசாமியின் தாயார் ருக்மணி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story