நாகையில், 6 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் மீன் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு


நாகையில், 6 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் மீன் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 7:28 PM GMT)

நாகையில் 6 நாட்களுக்கு பிறகு நேற்று பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீன் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது.

நாகப்பட்டினம்,

மீன்பிடி தடைகாலம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த மீன்பிடி தடைகாலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கரை பகுதிக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சிறிய வகை படகுகளான பைபர் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பானி புயல் காரணமாக நாகையில் பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகையில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

புயல் காரணமாக பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கும்பகோணம் பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் நாகை அண்ணா சிலை அருகே உள்ள பாரதி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதுதவிர கேரளாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக நாகைக்கு கொண்டு வரப்பட்டது. கெண்டை, விரால், இறால், வளர்ப்பு இறால் உள்ளிட்ட மீன்கள் கும்பகோணத்தில் இருந்தும், கிழங்கா உள்ளிட்ட மீன் வகைகள் கேரளாவில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் மீன்விலையும் அதிகரித்துள்ளது. ரூ. 130-க்கு விற்ற கெண்டை மீன் தற்போது ரூ.180-க்கும், ரூ.500-க்கு விற்ற விரால் மீன் ரூ.650-க்கும், ரூ.180-க்கு விற்ற வளர்ப்பு இறால் ரூ.250-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் பானி புயல் காரணமாக கடந்த 6 நாட்களாக கடலுக்கு செல்லாத பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல் 5 நாட்டிக்கல் தூரத்திற்கு உட்பட்ட கரை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். எனவே மீனவர்கள் கடலுக்கு சென்றதால் உள்ளூரில் மீன் தட்டுப்பாடு குறை வாய்ப்பு உள்ளது.

Next Story