மண்டியா, ஹாசன், துமகூரு ஆகிய 3 தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றிபெற வாய்ப்பே இல்லை - எடியூரப்பா சொல்கிறார்


மண்டியா, ஹாசன், துமகூரு ஆகிய 3 தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றிபெற வாய்ப்பே இல்லை - எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 2 May 2019 11:39 PM GMT (Updated: 2 May 2019 11:39 PM GMT)

மண்டியா, ஹாசன், துமகூரு ஆகிய 3 தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா, மண்டியாவில் நிகில் குமாரசாமி, துமகூருவில் தேவேகவுடா ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைவார்கள். என்ன செய்தாலும், இந்த மூன்று தொகுதியிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

தேர்தல் முடிவு வெளியான பிறகு கூட்டணி ஆட்சியை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து குமாரசாமி ஆலோசித்து வருகிறார். ஆனால் எக்காரணம் கொண்டும், இந்த கூட்டணி ஆட்சி நீடிக்காது. மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதா வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த தொகுதியில் பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற ஜனதா தளம் (எஸ்) முயற்சி செய்தது. ஆனால் சுயமரியாதை கொண்ட மண்டியா மக்கள், சுமலதாவை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள்.

மைசூரு தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட்டு இருப்பதாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறி இருக்கிறார். அவர் உண்மையை தான் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் பிரதாப்சிம்ஹா ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மாநிலத்தில் உள்ள 28 தொகுதியிலும் இதே நிலை தான் உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story