காரிமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


காரிமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 3 May 2019 10:00 PM GMT (Updated: 3 May 2019 7:00 PM GMT)

காரிமங்கலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.

காரிமங்கலம், 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித்தொழிலாளி. இவருக்கும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் பகுதியை சேர்ந்த ஷீபா (வயது 20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மெர்லினா என்ற 8 மாத பெண் குழந்்தை உள்ளது. மஞ்சுநாத் தான் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் தனது தாயாரிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷீபா, கணவரிடம் கேட்டும் அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மஞ்சுநாத் ஷீீபாவை அடித்து விட்டு குழந்தையை வாங்கி கொண்டு அறையில் அவரை பூட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷீலா மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனால் உடலில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் வலி தாங்க முடியாமல் ஷீபா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு மஞ்சுநாத் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து தீயை அணைத்தார். உடல் கருகிய பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து பென்னாகரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கலைவாணி சிகிச்சை பெற்று வந்த ஷீபாவிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் சிறிது நேரத்தில் ஷீபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன் அருள் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டசம்பவம் காரிமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story