அக்காள் கண் எதிரே பரிதாபம்: டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி


அக்காள் கண் எதிரே பரிதாபம்: டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 10 May 2019 10:00 PM GMT (Updated: 10 May 2019 5:07 PM GMT)

செங்குன்றம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தனது அக்காள் கண் எதிரேயே டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பி.எஸ். தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் சோனியா (வயது 18). இவருக்கு ஜெயசீலன் (13) என்ற மகனும் இருந்தார்.

நேற்று காலை அக்காள்- தம்பி இருவரும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மாதவரத்தில் கடையில் போடுவதற்காக அவற்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஜெயசீலன் ஓட்டினார். அவருக்கு பின்னால் சோனியா அமர்ந்து இருந்தார்.

வடகரை ஊராட்சி அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

ஜெயசீலன் மீது டேங்கர் லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் அவர், தனது அக்காள் கண் எதிரேயே தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த சோனியா, அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான ஜெயசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி தென்கூலைவேலி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story