சுவாமிமலை அருகே, மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு - தண்ணீர் கொண்டு வர சென்ற போது பரிதாபம்


சுவாமிமலை அருகே, மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு - தண்ணீர் கொண்டு வர சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 10 May 2019 10:30 PM GMT (Updated: 10 May 2019 11:54 PM GMT)

சுவாமிமலை அருகே உணவருந்திக்கொண்டிருந்த தம்பிக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள வேப்பத்தூர் கல்யாணபுரம் சாலை தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் குருசாமி(வயது35). தொழிலாளி. குருசாமி தனது தம்பி காளிதாசுடன்(34) சுவாமிமலை அருகே உள்ள பரட்டை கிராமத்தில் மரம் வெட்டும் வேலைக்கு சென்றார். வேலையின் போது அவர்கள் மதிய உணவு அருந்த சென்றனர். அப்போது குருசாமியின் தம்பி காளிதாஸ் குடிக்க தண்ணீர் கேட்டதால் தண்ணீர் பிடிக்க அருகே உள்ள பம்பு செட்டுக்கு குருசாமி சென்றார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை எதிர்பாராதவிதமாக குருசாமி மிதித்தார்.

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கி தனது அண்ணன் இறந்ததை அறிந்து அங்கு ஓடி வந்து காளிதாஸ் தனது அண்ணன் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த குருசாமிக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். உணவருந்திக்கொண்டிருந்த தம்பிக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற அண்ணன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் வேப்பத்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story