ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்–இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்–இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 May 2019 11:00 PM GMT (Updated: 13 May 2019 9:25 PM GMT)

ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.

பவானி,

ஈரோடு காவிரி ரோடு வீரப்பன்சத்திரம் மாசிமலை வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52). இவர் ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி பாவாத்தாள். இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். இதில் கவுதம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் கருவிகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையினர், ஈரோடு மாவட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த 20 நாட்களாக மூர்த்தி பாதுகாப்பு பணியில் இருந்தார்.

மூர்த்தி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அப்படியே கீழே சாய்ந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மூர்த்தியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி இறந்த தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர் கதிரவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story