ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா? கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்


ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா? கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2019 10:15 PM GMT (Updated: 14 May 2019 6:56 PM GMT)

ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் பெற்றாரா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் அப்பாவி மக்கள் இறந்து உள்ளனர். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. அங்கு ஒரு சம்பவம் என்றால், அது தமிழகத்தில் எதிரொலிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறுகிறார். சுதந்திரத்தின்போது நம் நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டது.

அப்போது, எத்தனை இந்துக்கள், முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ரத்தம் எல்லாம் இணைந்து வாகா எல்லையில் ஒன்று சேர்ந்தது. இது போன்ற மதக்கலவரங்களை எல்லாம் பார்த்து, பழகி, மதக்கலவரங்களை சரி செய்து, தற்போது இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்கி வரும் வேளையில், மதத்தை புகுத்தும் வகையில் பேசுவது இந்துக்களை வம்புக்கு இழுக்கும் வேலை. இதனை செய்யக்கூடாது. யாரை திருப்திபடுத்துவதற்காக இதனை செய்கிறார். கமல்ஹாசன் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டாரா? இதுகுறித்து அவரிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தவேண்டும்.

அவர், தான் செய்த தவறை உணர்ந்து விட்டால், நான் சொன்ன கருத்தை வாபஸ் பெற்றுவிடுவேன். எனக்கு யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. மக்களின் கொந்தளிப்பு இது போன்றுதான் இருக்கும். பொதுக்கூட்ட மேடையில் ஒரு சமூகத்தை குறிப்பிட்டு பேசினால், அங்கு கல்வீச்சு நடக்கும். மக்களின் கோபம் இது போன்று வரும் என்பதால்தான், அவர் திருந்துவதற்கு வாய்ப்பாகத்தான் எனது வார்த்தையை பதிவு செய்தேன். அவர் அதனை ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதே வார்த்தையை மாற்று மதத்தை சேர்ந்தவர்களை பற்றி பேசமுடியுமா?. இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்து உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வீரமணி, சில தி.மு.க. பேச்சாளர்கள் வரிசையில் கமல்ஹாசனும் சேர்ந்து உள்ளார்.

கமல்ஹாசன் பேசியது சரிதான் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். அவர் தமிழ்நாட்டில், இந்தியாவில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர். அவர் இத்தாலிக்கு தான் செல்ல வேண்டும். இந்து க்களை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டு இந்தியாவில் இருப்பது மடத்தனம். வீரமணி திமிர் பேச்சை அடக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் அடக்குவார்கள்.

நான் பதவி பிரமாணத்தின் போது எடுக்கப்பட்ட எந்த உறுதி மொழியையும் மீறவில்லை. நான் நாக்கை அறுப்பேன் என்று கூறவில்லை. மக்கள் கொந்தளித்து நாக்கை அறுக்கும் நிலை உருவாகும் என்பதைத்தான் கூறி இருக்கிறேன். கமல்ஹாசன் பேசியது நியாயம் கிடையாது. இது மதசார்பற்ற நாடு. கமல்ஹாசன் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா? என்ற சந்தேகம் வருகிறது. அவரது பேச்சு வன்மையாக கண்டிக்க கூடியது. அதனை திருத்திக் கொள்ள வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது வழக்கு தொடருவது தொடர்பாக முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதநல்லிணக்க ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பிரிவினைவாதம், பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் சாதாரண ஆள் இல்லை. ஒரு கட்சியின் தலைவர் பேசுகிறார். ஆகையால் அந்த கட்சி தடை செய்யப்பட வேண்டிய கட்சி என்பது எனது கருத்து. கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு அருகதை கிடையாது.

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் பச்சோந்தி. தி.மு.க.வை நம்பி செல்கிறவர்களை நடுத்தெருவில் விட்டு சென்று விடுவார்கள். தற்போது ராகுல்காந்தி நடுத்தெருவில் உள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்று வெறிபிடித்து உள்ளார். அதற்கு அவர் ஒரு சினிமா படம் எடுத்து, அதில் முதல்-அமைச்சராக நடித்து விட வேண்டியதுதான். வேறு வழி கிடையாது. எடப்பாடி பழனிசாமியின் பின்னால் மக்கள் அணிதிரண்டு இருக்கின்றனர். இதனால் தி.மு.க.வுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் வேலை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story