எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 6 டிக்கெட் கவுண்ட்டர்கள் திறப்பு காலை 7 மணி முதல் இரவு 10 மணி செயல்படும்


எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 6 டிக்கெட் கவுண்ட்டர்கள் திறப்பு காலை 7 மணி முதல் இரவு 10 மணி செயல்படும்
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 7:58 PM GMT)

எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் 6 முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்கும் மற்றும் புறநகர் ரெயிலில் பயணம் செய்வதற்கும் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் எடுப்பதற்கான கவுண்ட்டர்கள் மூர்மார்கெட் வளாகத்தில் உள்ளன.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் 6 முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன.

இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் வால்டாக்ஸ் சாலையில் இருந்து எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கான நுழைவுவாயில் அருகே திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடசென்னையில் இருந்து வால்டாக்ஸ் சாலை வழியாக வரும் பயணிகள், வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட் எடுக்க வேண்டுமானால் ரெயில் நிலையத்தின் மறுமுனையில் உள்ள மூர்மார்கெட் வளாகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் குறிப்பாக ரெயில் புறப்படும் முன்பாக கடைசி நிமிடங்களில் வந்து டிக்கெட் எடுக்கும் பயணிகள், மூர்மார்கெட் சென்று டிக்கெட் எடுத்து வந்து ரெயில் ஏறுவதற்குள் படாதபாடுபடுகின்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலம் பயணிகள் சிரமம் இல்லாமல் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதற்கு எளிதாக இருக்கும். இந்த கவுண்ட்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். அனைத்து வசதிகளும் செய்த பிறகு 24 மணி நேரம் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story