வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது


வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 14 May 2019 10:45 PM GMT (Updated: 14 May 2019 9:53 PM GMT)

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது.

அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:–

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியே பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.

வருகிற 23–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும்.

அதேபோல பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

வாக்கு எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற 17–ந்தேதியும், அதனை தொடர்ந்து 20–ந்தேதியும் அடுத்தடுத்த கட்ட பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படும்.

அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்படும் பெட்டியில் உள்ள முத்திரையின் தன்மையினை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டும். அதேபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வரிசை எண் விபரத்தையும் ஒப்பிட்டு உறுதி செய்திட வேண்டும். இந்த இரு விவரங்களையும் உறுதி செய்த பிறகு சம்பந்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள், வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்குகள் உள்ளிட்ட விவரங்களை உரிய படிவத்தில் பிழையில்லாமல் பூர்த்தி செய்து, ஒவ்வொரு சுற்றாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்வதற்கு கட்டாயம் அனுமதி இல்லை. தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை முறையே பின்பற்றி வெளிப்படைத்தன்மையாக பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story