மாணவ–மாணவிகளின் விளையாட்டு திறனை கண்டறிய உண்டு உறைவிட பயிற்சி முகாம்


மாணவ–மாணவிகளின் விளையாட்டு திறனை கண்டறிய உண்டு உறைவிட பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 14 May 2019 10:15 PM GMT (Updated: 14 May 2019 9:53 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6, 7 மற்றும் 8–ம் வகுப்பு மாணவ–மாணவிகளின் விளையாட்டு திறனை கண்டறியும் வகையில் அவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 6, 7 மற்றும் 8–ம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளின் விளையாட்டு திறனை கண்டறிந்து வெளிக்கொண்டு வரும் வகையில் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6, 7 மற்றும் 8–ம் வகுப்பு பயிலும் 60 மாணவர்கள், 41 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, ஜுடோ, கிரிக்கெட், ஆக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு அகாடமி மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி பெறுவார்கள்.

முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில், மாவட்ட திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமலினி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். விளையாட்டு ஆய்வாளர் வசந்தி வாழ்த்தி பேசினார். ஆக்கி பயிற்சியாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story