காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று தெரிந்ததால், 3-வது அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி - அன்புமணி ராமதாஸ் பேட்டி


காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று தெரிந்ததால், 3-வது அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 12:13 AM GMT)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று தெரிந்ததால், 3-வது அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பழனி, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவியுடன் நேற்று காலை பழனிக்கு வருகை தந்தார். பின்னர் அவர்கள் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்கள் மாநிலத்திலும், மத்தியிலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.

தேர்தல் பிரசாரத்தின்போது, மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் பிரச்சினைகள், உரிமைகள், வளர்ச்சி பற்றி பேசாமல் மோடி, எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் ஆகியோர் என தனிநபரை பற்றி 3-ம் தர பேச்சாளர் போல் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று தெரிந்ததால், 3-வது அணியை உருவாக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இது சந்திரசேகரராவ் உடனான சந்திப்பு இதை தெளிவுபடுத்துகிறது. எனவே காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. மேலும் நாட்டின் வளர்ச்சி, மக்களின் நிலையை பற்றி கவலைப்படாமல் ஆட்சி, அதிகாரம் குறித்த நிலையிலேயே அவரின் செயல்பாடு உள்ளது.

தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை உருவாக்கி, அதற்காக மத்திய அரசு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். காவிரி டெல்டா பகுதியும் செழிப்படையும்.

சமீபத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம். தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு செய்தால்தான் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக தடைசெய்ய முடியும். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story