மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் புதுப்பொலிவு பெறுகிறது ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்கு வசதி, படித்துறைகள் சீரமைப்பு


மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்கள் புதுப்பொலிவு பெறுகிறது ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்கு வசதி, படித்துறைகள் சீரமைப்பு
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 9:57 PM GMT)

தஞ்சையில்,மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட சாமந்தான்,சிவகங்கை, அய்யன்குளம் புதுப் பொலிவு பெறுகிறது. இதில் அய்யன்குளம், சாமந்தான் குளத்தில் ரூ.10¼ கோடியில் நடைபாதை, மின்விளக்குவசதி, படித்துறைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர்,

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் நீர் மேலாண்மை உருவாக்கப்பட்டது. தஞ்சை மாநகரில் நிலத்தடி நீரை மேம்படுத்த குளங்கள் வெட்டப்பட்டன. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சிவகங்கை பூங்கா குளம் வெட்டப்பட்டது. தஞ்சை பெரியகோவிலில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீர் இந்த குளத்திற்கு வரும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் சேவப்ப நாயக்கன்வாரியில் இருந்தும் இந்த குளத்திற்கு தண்ணீர் வரும்.

இந்த குளத்தில் இருந்து மேலவீதியில் உள்ள அய்யன்குளத்திற்கும், அங்கிருந்து அரண்மனையில் உள்ள குளங்கள் மற்றும் கொண்டிராஜபாளையத்தில் உள்ள சாமந்தான் குளத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக பூமிக்கடியில் நீர்வழிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட்டி சிட்டி திட்டம்

இதில் சிவகங்கை பூங்கா குளத்தில் மட்டும் தற்போது தண்ணீர் உள்ளது. மற்ற அய்யன்குளம், சாமந்தான் குளம் வறண்டு காணப்படுகிறது. இதில் சாமந்தான் குளத்திற்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. அய்யன்குளம், தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்திலும், சாமந்தான்குளம், நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்திலும் வெட்டப்பட்டன. இந்த குளங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டப் பணிகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 12 வகையான திட்டப்பணிகளில் ஒன்று, தஞ்சையில் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட சிவகங்கை குளம், அய்யன்குளம், சாமந்தான் குளத்தை புதுப் பொலிவு பெறச்செய்வது. இதில் சிவகங்கை பூங்கா குளம், பூங்கா பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரூ.10¼ கோடி ஒதுக்கீடு

அய்யன்குளம் மற்றும் சாமந்தான் குளத்தை மேம்படுத்த ரூ.10 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அய்யன்குளத்தில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக குளத்தில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து குளத்தின் 4 புறமும் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழி மற்றும் செல்லும் வழிகள் செயல்படாமல் உள்ளது. குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்த செடிகள் மற்றும் பாழடைந்தபடிகளும் அகற்றப்பட்டு சீரமைக்கப்படுகிறது.

இதே போல் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ளது சாமந்தான்குளம். இந்த குளத்தை சுற்றிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெறுகின்றன. முதல் கட்டமாக இந்த குளத்திலும் தேங்கி உள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவர் புனரமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

நடைபாதை- மின்விளக்கு வசதி

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தஞ்சை மாநகரில் உள்ள சிவகங்கை குளம், அய்யன்குளம், சாமந்தான் குளம் ஆகிய 3 குளங்களும் புனரமைக்கப்படுகின்றன. இந்த குளங்களை சுற்றிலும் உள்ள கரைகள் பலப்படுத்தப்பட்டு, நான்கு புறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. மேலும் மின்விளக்குகளும் அமைக்கப்படுகின்றன. குளத்தின் நடுவில் உள்ள பகுதிக்கு செல்லும் வகையில் நடைபாலமும் அமைக்கப்படுகின்றன. நடுவில் நீரூற்றும் அமைக்கப்பட உள்ளது.

அய்யன்குளம், சாமந்தான் குளத்தின் 4 பகுதிகளிலும் படித்துறைகளும் புனரமைக்கப்பட உள்ளது. குளத்தை சுற்றிலும் மின் விளக்கு வசதிகளும் செய்யப்படுகின்றன. குளங்களுக்கு நீர் வரத்து பாதைகளும் செப்பனிடப்பட்டு தண்ணீர் வரவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதில் அய்யன்குளத்தின் பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதத்தில் முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாமந்தான்குளத்தில் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.

Next Story