சிறுபாக்கம் அருகே பரபரப்பு, மாயமான முதியவர் கிணற்றில் எலும்பு கூடாக கிடந்தார் - போலீசார் விசாரணை


சிறுபாக்கம் அருகே பரபரப்பு, மாயமான முதியவர் கிணற்றில் எலும்பு கூடாக கிடந்தார் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 10:34 PM GMT)

சிறுபாக்கம் அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் கிணற்றில் எலும்பு கூடாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அடுத்த கொளவாய் கிராமத்தில், விவசாயி ஒருவரின் நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் எலும்பு கூடு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, கிராம மக்களின் உதவியோடு கிணற்றில் கிடந்த எலும்பு கூடை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அதன் அருகே வேட்டி, துண்டு, செருப்பு ஆகியன கிடந்ததால், அது ஒரு மனித எலும்பு கூடு என்பதை போலீசார் உறுதிபடுத்தினர்.

மேலும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்களின் அடிப்படையில், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஏற்கனவே அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர், கடந்த 1½ மாதத்திற்கு முன்பு தனது தந்தை ராமசாமி(வயது 50) என்பவர் மாயமாகி விட்டதாக புகார் செய்திருந்தார்.

எனவே, அது ராமசாமியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் இதுகுறித்து கொளஞ்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் கிணற்று பகுதிக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு கைப்பற்றப்பட்ட வேட்டி, துண்டு, செருப்பு ஆகியவற்றை பார்த்த அவர்கள், அது ராமசாமிக்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தனர். இதன் மூலம் அங்கு கைப்பற்றப்பட்டது ராமசாமியின் எலும்பு கூடுகள் தான் என்பதை போலீசார் உறுதிபடுத்திக் கொண்டனர்.

ராமசாமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது தவறி விழுந்து இறந்தாரா, இல்லையெனில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1½ மாதத்திற்கு முன்பு காணாமல் போன முதியவர், கிணற்றில் எலும்பு கூடாக கிடைத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story