கோடைவெயிலால் கொதிக்கும் தண்ணீர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்


கோடைவெயிலால் கொதிக்கும் தண்ணீர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 15 May 2019 10:59 PM GMT (Updated: 15 May 2019 10:59 PM GMT)

திண்டுக்கல் அருகே கோடை வெயிலால் கொதிக்கும் தண்ணீருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில் மந்தைகுளம் உள்ளது. இந்த குளம் 16½ ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த ஆண்டு பெய்த மழையில் குளத்துக்கு ஓரளவு தண்ணீர் வந்தது. அதேநேரம் தொடர்ச்சியாக மழை பெய்யாததால், தண்ணீர் வேகமாக வற்றியது. தற்போது குட்டை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் குளத்தின் தண்ணீரும் பச்சை நிறத்தில் மாறி விட்டது.

இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே குளத்தில் தண்ணீர் வற்றியதோடு, கோடைவெயிலும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதனால் மதிய வேளையில் குளத்தின் தண்ணீர், வெந்நீர் போன்று கொதிக்க தொடங்கி விடுகிறது. இதை தாங்கி கொள்ள முடியாமல் மீன்கள் உயிரிழந்து வருகின்றன.

அவ்வாறு மீன்கள் செத்து போவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் குளத்தின் ஒரு பகுதி முழுவதும் செத்துப்போன மீன்கள் ஏராளமாக மிதக்கின்றன. மேலும் செத்து மிதக்கும் மீன்கள் அகற்றப்படுவது இல்லை. இதன் காரணமாக மீன்கள் அழுகி குளத்தின் அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, மந்தைகுளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Next Story