கோவில்பட்டியில் தடுப்புச்சுவரில் பஸ் மோதி 12 பேர் காயம்
கோவில்பட்டியில் தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தெற்குமேடு, பள்ளிக்கட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் 50 பேர் ஒரு தனியார் பஸ்சில் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டு வந்தனர். கேரளா, கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் நவதிருப்பதிகளுக்கு சென்று விட்டு திருப்பரங்குன்றம் செல்வதற்காக புறப்பட்டனர்.
ஆரணியை சேர்ந்த சேகர் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு 2.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் புதிய பஸ்நிலையத்தை கடந்து சாய் பாபா கோவில் அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் ரோட்டின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளியப்பன் மனைவி சாரதா (வயது 55), மாற்று டிரைவர் கணேசன் (57), சந்திரன் (45), மகேந்திரன் (50), சஞ்சய் (13) உள்ளிட்ட 12 பேர் காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பஸ் டிரைவர் சேகரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story