மணல் கடத்தலை தடுக்க சென்ற, சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி - டிரைவர் கைது
மணல் கடத்தலை தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம் அருகே மணல் கடத்தப்படுவதாக கிள்ளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்அனுவம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
போலீசாரை கண்டதும் அதன் டிரைவர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்யும் நோக்கில் வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் அங்கிருந்து விலகி சென்று உயிர் தப்பினார்.
இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி, அதை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசார ணையில் அவர் மேலமூங்கிலடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் விமல்ராஜ் (வயது 19) என்பது தெரிந்தது. மேலும் டிராக்டரில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விமல்ராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான மேலமூங்கிலடியை சேர்ந்த புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story