பழனி அருகே, வாலிபர் வெட்டிக்கொலை


பழனி அருகே, வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

பழனி அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பழனி,

பழனி அடிவாரம் அருகேயுள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சின்னகன்னு. இவருடைய மகன் மண்டையன் என்ற சங்கர் (வயது 30). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆயக்குடி அருகே உள்ள அமரபூண்டியில் ஒரு வீட்டில் குடியேறினார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தந்தை, தாய் ஆகியோருடன் இருந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் சங்கர் வீட்டிற்கு காரில் ஒரு கும்பல் வந்தது. பின்னர் 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சங்கரை தூக்கி சென்றது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் வீட்டின் வெளியே சங்கரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வெட்டி கொலை செய்யப்பட்ட சங்கரின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் கொலை நடந்த இடத்துக்கு வந்தார். பின்னர் அவர் விசாரணையை முடுக்கி விட்டார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு பாலசமுத்திரம் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை சங்கர் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் செய்தது. இந்த கொலை வழக்கில் சங்கர் சிறையில் இருந்தார்.

இந்தநிலையில் சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்ததை அறிந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் நடந்த கொலைக்கு பழி வாங்க அவரை வெட்டி கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story