ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பார்வையிட்டார்


ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பைக்காரா நீர் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது. பைக்காரா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கால்வாய் வழியாக கிளன்மார்கன் அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு செங்குத்தான மலையில் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் செல்கிறது. கடந்த 1932-ம் ஆண்டு முதல் சிங்காரா நீர் மின் உற்பத்தி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் 3 ராட்சத மின் உற்பத்தி எந்திரங்கள் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள மின் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அரசூர், காரமடை போன்ற இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. நீர் மின் திட்டம் மேம்படுத்தப்பட்டு, மலைக்கடியில் 16 கிலோ மீட்டர் தூரம் மின் கேபிள் அமைக்கப்பட்டது. நீரில் இருந்து மின் உற்பத்தி செய்ய ஆயிரத்து 39 மீட்டர் தூரம் சுரங்கப்பாதையோடு கூடிய மின் உற்பத்தி நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இது நவீன தொழில்நுட்பம் கொண்டது ஆகும். இதனை கடந்த 1997-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலித ா தொடங்கி வைத்தார்.

மின் உற்பத்திக்கு பின்னர் வெளியேறும் தண்ணீர் கால்வாய் மூலம் மரவக்கண்டி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாயார் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து செங்குத்தான மலையில் மாயார் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று பார்வையிட்டார்.

மின் உற்பத்தி எவ்வாறு செய்யப்படுகிறது, மின் வினியோகம் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, குந்தா மின் உற்பத்தி செயற்பொறியாளர் ரகு ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story