வஜ்ரேஷ்வரி கோவிலில் கொள்ளையடித்த 5 பேர் கைது : ரூ.2.83 லட்சம் பறிமுதல்


வஜ்ரேஷ்வரி கோவிலில் கொள்ளையடித்த 5 பேர் கைது : ரூ.2.83 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2019 11:51 PM GMT (Updated: 21 May 2019 11:51 PM GMT)

பிரசித்தி பெற்ற வஜ்ரேஷ்வரி கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.7.10 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கும் வஜ்ரேஷ்வரியில் தான்சா ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வஜ்ரேஷ்வரி தேவி கோவில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள வெந்நீர் ஊற்றை மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

இந்தநிலையில், கடந்த 10-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் 6 கொள்ளையர்கள் கோவிலுக்கு புகுந்தனர். அவர்கள் கோவில் காவலரை கட்டிப்போட்டு விட்டு பின்னர் 4 உண்டியல்களை உடைத்து அதில் இருந்து ரூ.7.10 லட்சத்தை கொள்ளைடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கணேஷ்புரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், தத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரேத பகுதியில் உள்ள ஜவகர், சகாப்பூர் தாலுகா கிராமங்களை சேர்ந்த 6 பேர் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சுமார் 50 போலீசார் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றிய கோவிந்த் (வயது35), வினீத் (19), பாரத் (22), ஜக்தீஸ் (26), பிரவீன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான ரமேஷ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து ரூ.2லட்சத்து 83 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story