அடிப்படை வசதி கோரி ஜமாபந்தியில் மனு கொடுக்கலாம், அதிகாரி தகவல்


அடிப்படை வசதி கோரி ஜமாபந்தியில் மனு கொடுக்கலாம், அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 11:36 PM GMT (Updated: 7 Jun 2019 11:36 PM GMT)

மாவட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் அடிப்படை வசதி கோரி முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,

சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் மங்கலம் குறு வட்டத்திற்குட்பட்ட எரிச்சநத்தம், செவலூர், புதுக்கோட்டை, மங்கலம், தச்சக்குடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 49 மனுக்கள் பெறப்பட்டன.

ஜமாபந்தியின்போது உதயகுமார் கூறியதாவது:-

மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான ஜமாபந்தி 4-ந் தேதி தொடங்கியது. 10 தாலுகாக்களில், 38 பிர்கா மற்றும் 600 வருவாய் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

அப்போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப்பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய அடிப்படை தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.

கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.

அருப்புக்கோட்டையில் கலெக்டர் தலைமையில் 14-ந் தேதி வரையிலும். சிவகாசி தாலுகாவில் 12-ந் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ராஜபாளையத்தில் 12-ந் தேதி முடிய சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், விருதுநகர் தாலுகாவில் 14-ந் தேதி முடிய அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், திருச்சுழியில் 18-ந்தேதி முடிய தனி துணை ஆட்சியர் தலைமையிலும், வெம்பக்கோட்டையில் 12-ந் தேதி வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், காரியாபட்டி தாலுகாவில் 13-ந் தேதி முடிய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும், சாத்தூர் தாலுகாவில் 12-ந் தேதி முடிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கும்.

இந்த ஜமாபந்தியின் இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி தாசில்தார் வானதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று கொல்லங்கொண்டான் குறு வட்டத்தை சேர்ந்த கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் ஆனந்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜமீன் கொல்லங் கொண்டான், மேலப்பாட்ட கரிசல்குளம் மற்றும் சம்மந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேருக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டது. இதில் 51 மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து கிராம கணக்குகள் பராமரிக்கப்பட்டது தொடர்பாக தணிக்கை செய்யப்பட்டது.

மேலும் வருகிற 11-ந் தேதி சோழபுரம் குறுவட்டத்தை சேர்ந்தோரிடம் மனு பெறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Next Story