பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை 3,860 பேர் எழுதினர்


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை 3,860 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:00 PM GMT (Updated: 8 Jun 2019 7:47 PM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளினை 3,860 பேர் எழுதினர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 6 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 6 மையங்களிலும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 530 ஆண்களும், 1,761 பெண்களும் என மொத்தம் 2,291 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2,097 பேரும் தகுதி பெற்றிருந்தனர். தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு மையங்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) மைய அலுவலர்கள் சரிபார்த்தும், அவர்களை சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.

கலெக்டர் சாந்தா ஆய்வு

இதையடுத்து 9.55 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது. சரியாக 10 மணிக்கு தேர்வர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளினை 2,001 பேர் எழுதினர். 63 ஆண்களும், 227 பெண்களும் என மொத்தம் 290 பேர் தேர்வு எழுத வரவில்லை.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

அரியலூர் மாவட்டத்தில் 1,859 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 238 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வுகளை கண்காணிப்பதற்காக அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் பணியில் ஈடுபட்டார். வினாத்தாள் உள்ளிட்ட தேர்வுக்குரிய பொருட்களை தேர்வு கூடங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story