மாட்டுவண்டிமீது கார்மோதி வாலிபர் பலி மற்றொரு சம்பவத்தில் தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் சாவு


மாட்டுவண்டிமீது கார்மோதி வாலிபர் பலி மற்றொரு சம்பவத்தில் தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 5:38 PM GMT)

வேலூர் சத்துவாச்சாரியில் மாட்டுவண்டிமீது கார்மோதியதில் வாலிபர் பலியானார்.அதில் இருந்து2 பேர் குதித்ததால் உயிர்த்தப்பினர்.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 32). வெளிநாட்டில் மருத்துவ துறையில் வேலைபார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். பெற்றோருடன் வசித்து வந்த தினேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வேலூர் நகருக்கு வந்து விட்டு சத்துவாச்சாரிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது தினேஷ்குமார் சென்ற கார் பயங்கரமாக மோதியது. உடனே மாட்டு வண்டியில் இருந்த 2 பேர் குதித்து ஓடிவிட்டனர்.

மாட்டுவண்டி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் காரை ஓட்டிச்சென்ற தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்். ஒரு மாடும் உயிரிழந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தினேஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை டி.நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 49). வேலூருக்கு வந்திருந்த அவர் நேற்று மீண்டும் சென்னைக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்தும் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story