கவுந்தப்பாடி அருகே விவசாய நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு


கவுந்தப்பாடி அருகே விவசாய நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; போலீசாருடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:30 PM GMT (Updated: 12 Jun 2019 6:33 PM GMT)

கவுந்தப்பாடி அருகே விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கவுந்தப்பாடி,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை 564 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 524 உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மீதம் உள்ள உயர் மின் கோபுரங்கள் திருப்பூர் மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டி உள்ளது.

இந்தநிலையில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதைத்தொடர்ந்து மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வளையக்காரன்பாளையத்தில் 2 உயர் மின்கோபுரங்கள் அமைக்க நேற்று பணியாளர்கள் வந்தனர். பொக்லைன் மூலம் குழியும் தோண்டப்பட்டது. பாதுகாப்புக்காக கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிர்மலாதேவி(கவுந்தப்பாடி), ஆர்பர்ட் (கடத்தூர்) உள்பட 30 போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே உயர்மின் கோபுரம் அமைக்கும் தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு அங்கு வந்தார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்கள் மின்வாரிய பணியாளர்களிடம், ’எங்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை. உயர்மின்கோபுரம் இங்கே அமைக்க கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்த முயன்றார்கள். அப்போது போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன்பின்னர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.பி.குணசேகரன் உள்பட 10 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, வேனில் ஏற்றிச்சென்றார்கள். இதனால் கூட்டம் கலைந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே 2 உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story