அயனாவரத்தில் போட்டோ ஸ்டூடியோ- செல்போன் கடையில் திருட்டு


அயனாவரத்தில் போட்டோ ஸ்டூடியோ- செல்போன் கடையில் திருட்டு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 7:35 PM GMT)

அயனாவரத்தில் போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது தெருவில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் நிர்மல்குமார் (வயது 40). நேற்று முன்தினம் இரவு இவர், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அவர், கடைக்கு சென்று பார்த்தார். அங்கு, நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அவருக்கு சொந்தமான ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 2 கேமராக்கள் மற்றும் அவரது நண்பர் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கேமரா ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

அதேபோல் அயனாவரம் மேட்டுத்தெருவில் உள்ள சபீர் (32) என்பவரது செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வரும் 2 மர்மநபர்கள்தான், இந்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது உறுதியானது. மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story