சிங்காநல்லூர் அருகே, காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது


சிங்காநல்லூர் அருகே, காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 11:57 PM GMT)

சிங்காநல்லூர் அருகே காதலிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய போலீஸ் ஏட்டு மகன் கைது செய்யப்பட்டார்.

சிங்காநல்லூர், 

கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை, கோவை புலியகுளத்தை சேர்ந்த விஜய் அரவிந்த் (வயது 27) என்பவர் ஒரு வருடமாக காதலித்து வந்தார்.அந்த இளம்பெண்ணும் அவரை காதலித்து வந்தார். நாளடைவில் விஜய்அரவிந்த்தின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த இளம்பெண் அவரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார். மேலும் இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனாலும் விஜய்அரவிந்த், அந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய்அரவிந்த்தின் தந்தை ரெயில்வே போலீஸ் ஏட்டாக பணிபுரிவதால், அந்த பெண்ணின் குடும்பத்தினரை சமரசம் செய்து வைத்தார். ஆனாலும் விஜய்அரவிந்த் தொடர்ந்து அந்த இளம்பெண்ணை துன்புறுத்தி வந்தார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்அரவிந்த்தை கைது செய்தனர்.

Next Story