ஆரணி அருகே மணலில் புதைந்து டிரைவர் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


ஆரணி அருகே மணலில் புதைந்து டிரைவர் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 5:52 PM GMT)

ஆரணி அருகே மணலில் புதைந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, 

ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சரவணன் (வயது 24), டிரைவர். இவர், நேற்று முன்தினம் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது, மணல் சரிந்து அவர் மீது விழுந்ததாகவும், இதில் சரவணன் மண்ணில் புதைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சரவணனை மீட்டனர். அப்போது அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜா, தாசில்தார் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது சரவணனின் உறவினர்கள், அவர் நெஞ்சுவலியால் இறந்ததாகவும், மணல் அமுக்கி இறக்கவில்லை என்றும் கூறினர். ஆனால் போலீசார் அதையும் மீறி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணனின் உறவினர்கள் திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சரவணனின் தந்தை சங்கர் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்துள்ள புகாரில், எனது மகன் நெஞ்சுவலியால் இறந்ததாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story