வேடசந்தூரில், அ.தி.மு.க. நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - தடுக்க முயன்ற நண்பரை தாக்கி பணம் பறிப்பு


வேடசந்தூரில், அ.தி.மு.க. நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - தடுக்க முயன்ற நண்பரை தாக்கி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 11:02 PM GMT)

வேடசந்தூரில் அ.தி.மு.க. நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது நண்பரிடம் பணம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாத்தினிபட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று காலை தனது நண்பரான வேடசந்தூர் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டினார். கரூர் சாலையில் அவர்கள் சென்றபோது, திடீரென பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளை மறித்தனர்.

பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கண்இமைக்கும் நேரத்தில் கார்த்திக்கை வெட்டினர். இதையடுத்து அவர் தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். அப்போது தடுக்க முயன்ற நண்பர் கார்த்திகேயனை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். இதில் கார்த்திக்கிற்கு கைகள் மற்றும் தொடையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு அவரது நண்பர் கார்த்திகேயன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அருப்பம்பட்டியை சேர்ந்த செந்தில், முருகன், பிரபு ஆகியோர் கார்த்திக்கை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேடசந்தூரில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story