குடும்ப பிரச்சினை காரணமாக மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி


குடும்ப பிரச்சினை காரணமாக மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
x
தினத்தந்தி 16 Jun 2019 11:15 PM GMT (Updated: 16 Jun 2019 7:02 PM GMT)

குடும்ப பிரச்சினை காரணமாக, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். பின்னர் அவர் திடீரென அங்கிருந்த மரத்தில் ஏறினார். மரத்தின் உச்சிக்கு சென்ற அவர், தான் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி சத்தம் போட்டார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கும், திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர், தன்னை பிடிக்க முயன்றால் மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே மரத்தின் அடிப்பகுதியில் தார்ப்பாய்களை தீயணைப்பு படையினர் விரித்து பிடித்தனர்.

ஒருவேளை, அந்த வாலிபர் மரத்தில் இருந்து கீழே குதித்தால் அவரை காப்பாற்றுவதற்காக தீயணைப்பு துறையினர் அந்த ஏற்பாட்டை செய்தனர். இதற்கிடையே மரம் ஏறுவதில் திறமை பெற்ற போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள், மரத்தில் ஏறி அந்த வாலிபரை மீட்க முயன்றனர். இதைப்பார்த்த வாலிபர், மரத்தின் மற்றொரு கிளைக்கு தாவ முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை அவருடைய தலையில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் போலீசாரும், தீயணைப்பு படையினரும் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் பின்தொடர்ந்து மரத்தில் ஏறிய போலீசார், அந்த வாலிபரை பிடித்து பத்திரமாக கீழே இறக்கினர்.

இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறைபுதூரை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபாண்டி (வயது 28) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், ஆதவன் (3) என்ற மகனும், அர்ச்சனா (5) என்ற மகளும் உள்ளனர்.

தனபாண்டி தனது குடும்பத்தினருடன் சிறுமலை பழையூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று திண்டுக்கல் வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானம் குடித்துவிட்டு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story