சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:09 PM GMT)

சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.

திருத்துறைப்பூண்டி,

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சட்ட ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், வாகிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல மன்னார்குடியில் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மன்னார்குடி பெரியார் சிலை அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் தொடங்கி வைத்தார். ஊர்வலம் மேலராஜவீதி, பந்தலடி, கோபாலசமுத்திரம் கீழவீதி வழியாக சென்று மீண்டும் பெரியார் சிலையை வந்தடைந்தது. இதில் போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். ஹெல்மெட் அணிந்து சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்திடும் வகையில் போலீசார் ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

Next Story