எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 16 Jun 2019 10:45 PM GMT (Updated: 16 Jun 2019 7:11 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 47 குழந்தைகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசும் போது, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கும் வகையில் இந்த பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது. நகராட்சி, மாநகராட்சி பணி என்பது ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் பணியாற்றுகின்ற பணி இல்லை. தண்ணீர் வசதி, பொது சுகாதார பணிகள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் போன்ற பணிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டிய பணிகள் ஆகும். இதனால் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க இயலாத நிலை உள்ளது. ஆனாலும் இந்த குழந்தைகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு படிக்கம் போது, தங்கள் வாழ்வில் அடைய வேண்டிய லட்சியத்தை நிர்ணயித்து அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது பெற்றோர்கள் கடினமாக உழைத்து தங்களை படிக்க வைக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். மாணவ செல்வங்கள் போட்டிகள் நிறைந்த இன்றைய காலத்தில் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் உயர்படிப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் ஆசிரியர் சீத்தாராமன், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சண்முகம், சீனிஅஜ்மல்கான், கண்ணன், நெல்லை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து, தமிழ்நாடு நகராட்சி ஆணையாளர்கள் சங்க மாநில செயலாளர் முருகேசன், தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையாளர் (பொறுப்பு) பிரின்ஸ் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story