மதுரை-கன்னியாகுமரி இடையே இருவழி அகல ரெயில் பாதை பணி 2022-ம் ஆண்டில் முடிவடையும்


மதுரை-கன்னியாகுமரி இடையே இருவழி அகல ரெயில் பாதை பணி 2022-ம் ஆண்டில் முடிவடையும்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 7:45 PM GMT)

மதுரை-கன்னியாகுமரி இடையே இருவழி அகல ரெயில் பாதையின் பணி வருகிற 2022-ம் ஆண்டில் முடிவடையும் என தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி சுதாகர் ராவ் தெரிவித்தார்.

திருச்சி,

தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு மூலம் தமிழகம் மற்றும் கேரளாவில் மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல பாதையாக மாற்றுதல், புதிய தண்டவாள பாதை அமைத்தல், இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி என மொத்தம் 257 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகத்தில் கூடுவாஞ்சேரி-சிங்கபெருமாள் கோவில், தாம்பரம்-கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணியும், தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான்-மேல்மருதூர் இடையே புதிய அகல ரெயில் பாதையும், மதுரை-உசிலம்பட்டி-போடிநாயக்கனூர் இடையேயான மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாகவும், மேட்டூர் அணை முதல் மேச்சேரி ரோடு வரையும், மேச்சேரி-ஓமலூர் இடையேயும் இரு வழி அகல ரெயில் பாதையும் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, சென்னை அத்திப்பட்டு புதுநகர்-அத்திப்பட்டு இடையே இரு வழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். இதற்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பின் திருச்சி கோட்டம் மீட்டர் கேஜ் பாதை இல்லாத கோட்டமாக மாறிவிடும். மதுரை-கன்னியாகுமரி இடையே இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ரெயில்வே கட்டுமான பிரிவும், ரெயில்வேயின் ஒரு அங்கமான ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது. இந்த பணி வருகிற 2022-ம் ஆண்டில் முடிவடையும்.

கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணியை கேரள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை ரெயில் பாதையுடன் மின்மயமாக்கல் பணிகளும் நடந்து வருகிறது. இருவழி அகல ரெயில் பாதை பணி முடிவடையும்போது மின்மயமாக்கல் பணிகளும் முடிவடையும். சேலம் கோட்டத்தில் ஒரு சில இடங்களில் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட வேண்டி உள்ளது. அந்த பணிகள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும்.

இவ்வாறு சுதாகர்ராவ் கூறினார்.

முன்னதாக திருச்சியில் ஆம்னி பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை என்ஜினீயர் அலுவலக வளாகத்தில் புனரமைக்கப்பட்ட இறகுப்பந்து மைதானத்தையும், ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்க கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு முதன்மை பொறியாளர் சுமித்சிங்கால், திருச்சி துணை முதன்மை என்ஜினீயர் பூபதி, திருச்சி கோட்ட ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ஜோசப் லூயிஸ், மாநில தலைவர் ஈகிள் சுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story