ரெயிலில் அடிபட்டு இறந்த மாணவர் சாவில் மர்மம்: கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


ரெயிலில் அடிபட்டு இறந்த மாணவர் சாவில் மர்மம்: கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 July 2019 11:00 PM GMT (Updated: 1 July 2019 8:04 PM GMT)

புதுக்கோட்டை அருகே செல்பி எடுக்க முயன்றபோது, ரெயிலில் அடிபட்டு இறந்த மாணவர் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வுபெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது மனைவி ரேவதி. இவர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி புதுக்கோட்டை அருகே பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று பாலத்தில் வைத்து, அந்த வழியாக வந்த மானாமதுரைமன்னார்குடி பயணிகள் ரெயிலின் முன்பு நின்று மணிகண்டன் தனது நண்பர் மகேந்திரனுடன் செல்பி எடுக்க முயன்றபோது, மணிகண்டன் ரெயில் மோதி இறந்தாக போலீசார் கூறிவந்தனர். இந்த சம்பவம் குறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மணிகண்டன் சாவில் மர்மம் இருப்பதாகவும், மணிகண்டன் செல்பி எடுக்க முயன்றபோது இறந்ததாக போலீசார் தவறாக கூறி வருகின்றனர். மணிகண்டனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் எங்களுக்கு தெரியவேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கூறுகையில், மணிகண்டனுக்கு டிக் டாக்கை பயன்படுத்த தெரியாது. மேலும் மணிகண்டன் செல்பி எடுக்க முயன்றபோது இறக்கவில்லை. அப்படி செல்பி எடுக்க முயன்றபோது இறந்து இருந்தால், மணிகண்டனில் செல்போன் உடைந்து இருக்கும். ஆனால் செல்போன் உடையவில்லை. மேலும் மணிகண்டன் செல்போனில் செல்பி எடுத்த படங்கள் எதுவும் இல்லை. இதனால் மணிகண்டன் சாவில் மர்மம் உள்ளது.

இது தொடர்பாக நாங்கள் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். ஆனால் போலீசார் அவர்களை விட்டு விட்டனர். போலீசார் எதற்காக மணிகண்டன் ரெயிலில் அடிபட்டு இறந்தார் எனக்கூறி வருகின்றனர் என தெரியவில்லை. மணிகண்டனுடன் இருந்த மகேந்திரனிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் மணிகண்டன் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றனர்.

Next Story