கலெக்டர் அலுவலகம் அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 8:15 PM GMT)

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புறநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.

திருச்சி,

தமிழகத்தில் உள்ள 4,600 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் சங்க செயலாளர்களை, தமிழக அரசு பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், செயலாளர் பணியிடத்திற்கு கீழ் பணிபுரிந்து வரும் உதவி செயலாளர், முதுநிலை எழுத்தர், எழுத்தர், உர விற்பனையாளர் மற்றும் பொதுவினியோக திட்ட(ரேஷன்கடை) விற்பனையாளர்கள் 10 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்தும் பதவி உயர்வுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடும் நிலை ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த இடமாற்ற நடவடிக்கையால் சங்கங்களை நலிவடைய செய்வதோடு தொடர்ந்து சம்பளம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பணி இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், மேலும் இடமாற்றத்தினால் சம்பள விகிதத்திலும் மாற்றம் ஏற்பட்டு பணியாளர்கள் மத்தியில் விரக்தி ஏற்படும் என்றும், எனவே அரசு இடமாற்ற உத்தரவு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் தங்கராஜூ, தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்து வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர்கள் பெரியக்காள், வெங்கடேஷ் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள ரேஷன்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் உள்ள ஒரு சில சங்கங்களின் கூட்டு சதியின் காரணமாக ஏற்படுகிற முறைகேடுகளையும், தவறுகளையும் அடிப்படையாக வைத்து ஒட்டு மொத்த செயலாளர்களையும் இடமாறுதல் செய்வது சங்கங்களின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்றும் நிர்வாகிகள் தரப்பில் பேசப்பட்டது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்களின் ரேஷன்கடை விற்பனையாளர்களும் அடங்குவர். நேற்றைய போராட்டம் காரணமாக, திருச்சி புறநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டியம், லால்குடி, துறையூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, திருவெறும்பூர், முசிறி, தா,பேட்டை, அந்தநல்லூர், மணிகண்டம் என 14 ஒன்றியங்களில் உள்ள சுமார் 750 ரேஷன் கடைகளும் மூடப்பட்டு விட்டதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புறநகர் பகுதியில் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றுடத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story