தலைவர் பதவி ராஜினாமா: ராகுல்காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தல்


தலைவர் பதவி ராஜினாமா: ராகுல்காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 7:44 PM GMT)

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் பசும்பொன் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் மகேஸ்வரன், நகர தலைவர் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கிச்சநாயக்கன்பட்டி முருகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். விருது நகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு காரணமாக இருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

வருகிற 15-ந்தேதி விருதுநகரில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு காமராஜருக்கு அஞ்சலி செலுத்துவது. இதேபோல் மாவட்டம் முழுவதும் காமராஜர் படத்தை அலங்கரித்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் மாநில தலைவர் மகேஸ்வரன் கூறியதாவது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்து இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 40-க்கும் மேற்பட்டவர்கள் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்த போவதாக கூறினார்.

Next Story