யானைகளால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


யானைகளால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 9:14 PM GMT)

யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு மற்றும் பேரண்டபள்ளி வனப்பகுதிகளில் யானைகள் பதுங்கி இருந்து இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை மிதித்து அட்டகாசம் செய்து வருகின்றன. யானைகளின் நடமாட்டத்தால் கிராம மக்களும், விவசாயிகளும் மிகவும் கவலை அடைந்தனர். மேலும் யானைகளால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பேரண்டபள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள், அருகில் உள்ள ஆலூர் கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு கோவிந்தப்பா மற்றும் சீனிவாசன் ஆகிய விவசாயிகளின் விவசாய நிலத்திற்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை கால்களால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. மேலும், அங்கிருந்த மின் மோட்டார்களையும் உடைத்து யானைகள் சேதப்படுத்தின.

யானைகளின் அட்டகாசத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி திடீரென பேரண்டபள்ளி-அத்திமுகம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தக்காளி செடிகள், பம்ப் செட் உதிரி பாகங்களை சாலையின் நடுவே பரப்பி, அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், காட்டுப்பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி விட்டது. அந்த வகையில், கோவிந்தப்பா மற்றும் சீனிவாசன் ஆகிய விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

எனவே, அவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விளைநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழையாதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். விவசாயிகளின் திடீர் மறியல் காரணமாக, பேரண்டபள்ளி-அத்திமுகம் சாலையின் இருபுறமும், 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story