பிறந்த குழந்தையை பார்க்க விடாததால் ஆத்திரம்: மாமியாரை பிளேடால் வெட்டிய தொழிலாளி கைது


பிறந்த குழந்தையை பார்க்க விடாததால் ஆத்திரம்: மாமியாரை பிளேடால் வெட்டிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 July 2019 11:15 PM GMT (Updated: 10 July 2019 7:50 PM GMT)

கஸ்தூரிபாய்காந்தி தாய், சேய் நல அரசு ஆஸ்பத்திரியில் தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க அனுமதிக்காத ஆத்திரத்தில் மாமியாரை பிளேடால் வெட்டிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கலங்கரைவிளக்கம் ஏகாம்பரம் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 23). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி(21). இவருக்கு நேற்று முன்தினம் கஸ்தூரிபாய் காந்தி தாய், சேய் நல அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. முத்துலட்சுமியின் அருகில் இருந்து அவருடைய தாய் பச்சையம்மள் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ரஞ்சித் நேற்று முன்தினம் இரவு தனது குழந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரஞ்சித்துடன், அவருடைய மாமியார் பச்சையம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிறந்த குழந்தையை பார்க்கவும் ரஞ்சித்தை அவர் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், தான் கையில் வைத்திருந்த பிளேடால் மாமியார் பச்சையம்மாள் கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பச்சையம்மாள் வலியால் அலறி துடித்தார்.

இதுபற்றி ஆஸ்பத்திரி ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித்தை கைது செய்தனர். காயம் அடைந்த பச்சையம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story