உளுந்தூர்பேட்டை அருகே, மினிலாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத குழந்தை சாவு


உளுந்தூர்பேட்டை அருகே, மினிலாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத குழந்தை சாவு
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 9:00 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பச்சையம்மாள். ராஜா கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 மாதத்தில் பிரவீன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரியின் அடியில் அந்த குழந்தை சென்றது.

இந்த நிலையில் மினிலாரிக்கு அடியில் குழந்தை சென்றதை அறியாத அதன் டிரைவர் விஜய் (வயது 30), மினிலாரியை இயக்கினார். இதில் மினிலாரி சக்கரத்தில் சிக்கி குழந்தை பலத்த காயமடைந்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இது குறித்த புகாரின்பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிலாரி டிரைவர் விஜயை கைது செய்தனர்.

Next Story