மும்பையில் சாக்கடையில் விழுந்த சிறுவனின் கதி என்ன? பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு


மும்பையில் சாக்கடையில் விழுந்த சிறுவனின் கதி என்ன? பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2019 12:00 AM GMT (Updated: 11 July 2019 9:34 PM GMT)

மும்பையில் திறந்த நிலையில் கிடந்த சாக்கடை கால்வாயில் விழுந்த 3 வயது சிறுவன் மாயமானான். அவனை தேடும் பணி நடந்து வருகிறது.

மும்பை,

மும்பையில் திறந்த நிலையில் கிடந்த சாக்கடை கால்வாயில் விழுந்த 3 வயது சிறுவன் மாயமானான். அவனை தேடும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டடது.

சிறுவன் மாயம்

மும்பை கோரேகாவ் கிழக்கு, மலாடு - லிங் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சவுக் பகுதியில் திவ்யான்ஷ் என்ற 3 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்தான். சிறுவன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த போது திடீரென மாயமானான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் அந்த பகுதியில் அவனை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள மசூதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தனர். அப்போது அதில் பதிவாகி இருந்த காட்சி நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருந்தது.

சாக்கடையில் விழுந்தான்

வீட்டின் வௌியே விளையாடி கொண்டு இருந்த சிறுவன் அந்த பகுதியில் இருந்து மின்மாற்றி நோக்கி நடந்து வருகிறான். அப்போது திடீரென அவன் அந்த பகுதியில் திறந்த நிலையில் கிடந்த சாக்கடையில் விழுந்தது தெரிந்தது. இதையடுத்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் மாநகராட்சியினர் விரைந்து வந்தனர்.

அவர்கள் பொது மக்களுடன் சேர்ந்து சம்பவம் நடந்த சாக்கடை கால்வாயிலும், அருகில் உள்ள பெரிய சாக்கடை கால்வாயிலும் தேடினர். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 12 மணி நேரம் தேடியும் சிறுவன் மீட்கப்படவில்லை. அவன் சாக்கடையில் ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கோரேகாவ் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாக்கடை கால்வாயின் மூடப்பட்ட பகுதி உடைந்து கிடந்து உள்ளது. அதை சரிசெய்யாமல் அலட்சியமாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரேகாவ் பகுதியில் பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

தகவல் அறிந்து வந்த போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் சிறுவன் சாக்கடையில் விழுந்து பலியான இடத்தை பார்வையிட்டார். அப்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு மும்பை மாநகராட்சி தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கூறினார். இதேபோல அந்த கட்சியின் மற்றொரு தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், மாநகராட்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிவசேனா ஏன் இந்த சம்பவத்தை தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை என்றார்.

மும்பையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் மூழ்கி 2017-ம் ஆண்டு பிரபல டாக்டர் தீபக் அமராபுர்கர் பலியானார். சமீபத்தில் கூட வீர் தேசாய் ரோட்டில் திறந்த கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்த பத்திரிகையாளர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார். மும்பையில் திறந்து கிடக்கும் சாக்கடைகள், மழைநீர் கால்வாய்களை மூட பொது மக்கள் மாநகராட்சியை வலியுறுத்தி உள்ளனர்.

Next Story