சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திடீர் மாற்றம் மாநில புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பால்தேவ் ஹர்பல் சிங் நியமனம்


சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திடீர் மாற்றம் மாநில புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பால்தேவ் ஹர்பல் சிங் நியமனம்
x
தினத்தந்தி 12 July 2019 11:15 PM GMT (Updated: 12 July 2019 10:34 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மாநில புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பால்தேவ் ஹர்பல் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மாநில புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பால்தேவ் ஹர்பல் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி

மராட்டிய சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்றும், செப்டம்பர் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மராட்டிய மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த அஸ்வினி குமார் திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பால்தேவ் ஹர்பல் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த அஸ்வினி குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தியதாகவும், இதனால் அவர் மீது ஆளும் கட்சியினர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

காத்திருப்போர் பட்டியல்

அஸ்வினி குமாருக்கு வேறு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள பால்தேவ் ஹர்பல் சிங் 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவை சேர்ந்தவர். இவர் மும்பையில் சாந்தாகுருஸ் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செயலாக்க மண்டல (சீப்ஸ்) வளர்ச்சி கமிஷனராக இருந்தார்.

அதற்கு முன்பு மாநில அரசின் தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story