படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல்


படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல்
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 5:16 PM GMT)

படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2017-2018 மற்றும் 2018-2019 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. இவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 2019-2020 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து 2017-2018 மற்றும் 2018-2019-ம் ஆண்டு இந்த பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளி எதிரே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் படப்பை வருவாய் ஆய்வாளர் மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவ- மாணவிகள் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு முதலில் மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவ- மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் காரமமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் ½ மணிநேரத்திற்கும் மேல் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

Next Story