உத்தர கன்னடா மாவட்டத்தில் 42.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது கொடசள்ளி அணை நிரம்பியது


உத்தர கன்னடா மாவட்டத்தில் 42.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது கொடசள்ளி அணை நிரம்பியது
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 9:35 PM GMT)

உத்தர கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 42.7 மி.மீ. அளவிற்கு மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்வார், 

உத்தர கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 42.7 மி.மீ. அளவிற்கு மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர் கனமழையால் கொடசள்ளி அணை நிரம்பியுள்ளது.

கங்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் ஒன்றாக விளங்குவது உத்தர கன்னடா மாவட்டம். இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஓடும் கங்காவதி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

குறிப்பாக அங்கோலா தாலுகாவிற்கு உட்பட்ட கங்காவதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எல்லாப்புரா, ஜோயிடா ஆகிய கிராமங்களிலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தரைப்பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

42.7 மி.மீ. மழை...

தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பல இடங்களுக்கு மின்இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கங்காவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கொடசள்ளி அணை நிரம்பி உள்ளது. இது சிறிய அணை ஆகும். இந்த அணையில் 12 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் வரை தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் இவ்வணை நிரம்பி உள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கத்ரா ஆற்றில் பாய்ந்தோடுகிறது. இதற்கிடையே இன்னும் 2 நாட்களுக்கு உத்தர கன்னடா மாவட்டத்தில் மழை பெய்யும் என்றும், அதனால் ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்கள், கடற்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை உத்தரகன்னடா மாவட்டத்தில் 42.7 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story