கடலூர் முதுநகர் அருகே கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது


கடலூர் முதுநகர் அருகே கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 10:45 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர், 

குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையம் கிராமம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கோவிந்த ராஜன்(வயது 34). கண்டக்டர். திருமணமான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் ராஜமுருகன்(35) மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த இரு வீட்டாரும் அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராஜமுருகன், இவரது தம்பி ராஜசிம்மன்(34) மற்றும் சிலர் கோவிந்தராஜனை வெட்டி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து ராஜமுருகனும், ராஜசிம்மனும் சிதம்பரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலை சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையின்போது ராஜமுருகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நானும், கோவிந்தராஜனும் நண்பர்களாக பழகி வந்தோம். இதனால் அவர் என் வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வார். இதில் எனது மனைவிக்கும், கோவிந்தராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த நான் கோவிந்தராஜனையும், எனது மனைவியையும் பலமுறை கண்டித்தும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை.

இந்த நிலையில் கோவிந்தராஜன் எனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார். அவர்களை பல இடங்களில் தேடி அலைந்தேன். சில நாட்களுக்கு பிறகு கோவிந்தராஜன் நத்தப்பட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பது எனக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நான், எனது தம்பி ராஜசிம்மன் மற்றும் 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நத்தப்பட்டுக்கு சென்று, அரிவாளால் வெட்டி கோவிந்த ராஜனை கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

இதையடுத்து ராஜமுருகன், ராஜசிம்மன் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலை தொடர்பாக அவர்களது நண்பர்களான கருமாச்சிப்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த இடிமுரசு என்கிற அமிர்தராஜ்(32), அக்கேஷ்(20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story