ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுவை சட்டசபையில் தீர்மானம் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுவை சட்டசபையில் தீர்மானம் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2019 11:34 PM GMT (Updated: 14 July 2019 11:34 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாராயணசாமியிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.

காரைக்கால்,

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமியை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், புதுச்சேரி மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வருகிற 25-ந் தேதி புதுடெல்லியில் நாடாளுமன்றம் முன் தமிழக, புதுச்சேரி மாநில விவசாயிகள் சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் கலந்துகொண்டு, உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கவேண்டும் என்று கூறினேன்.

புதுச்சேரி சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்போது அவர் (நாராயணசாமி), ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம். அதனை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், இது தொடர்பாக பெட்ரோலியத்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

விரைவில் புதுச்சேரி சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும், சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் குறித்த தேதி முடிவான பிறகு டெல்லி உண்ணாவிரதத்தில் பங்கேற்பது பற்றி ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக நாராயணசாமி கூறினார். எனவே, திட்டமிட்டப்படி, புதுடெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story