விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு


விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 22 July 2019 10:15 PM GMT (Updated: 22 July 2019 7:41 PM GMT)

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென இறந்தார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தை சேர்ந்தவர் கேசவேல் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராமாயி (32). இவர் கடந்த 10-ந்தேதியன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ராமாயிக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் உடனே அவரை மேல்சிகிச்சைக்காக கடந்த 20-ந் தேதியன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார்.

இதையறிந்ததும் ராமாயியின் உறவினர்கள் இரவு 10.45 மணியளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது தவறான சிகிச்சை அளித்ததால் தான் ராமாயி இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து ராமாயியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து நேற்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ராமாயியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

Next Story